ஆசிரியர் தினக் கட்டுரைப் போட்டி – மாநில முதலிடம் பெற்ற கட்டுரை


ஆசிரியர் தினச் சிறப்பிதழையொட்டி மீனாட்சி மருத்துவ மலர் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கட்டுரைப் போட்டி நடத்தியது.  மாநில அளவில் மனதில் நின்ற மாணவர் கட்டுரை எழுதி முதல் பரிசு பெற்ற நெல்லையைச் சேர்ந்த ஆசிரியர் ச. மகாதேவனின் கட்டுரை இதோ…
    ஓர் ஆசிரியரின் வாய் திறக்கும்போது, ஆயிரம் சிறைச்சாலைகள் கதவுகள் அடைக்கப்படுகின்றன.
    பாடம் நடத்தப்படுவதைவிடப் பாடமாய் நடந்தோமென்றால் மாணவன் மாண்புடையவனாவான்.  ஆசிரியரின் வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பு இருப்பதை மாணவன் உணர்ந்தால் அவனால் சனாதிபதியாகுமளவுக்குச் சாதிக்க முடிகிறது.  ஓர் அம்பேத்கார் அறிஞராக உருவெடுத்தாரென்றால், அவரின் ஆசிரியர் பேரறிஞர்!
    ஏதென்ஸ் நகரத்தின் இனிய இளைஞர்களுக்கு, உன்னையே நீ அறிவாய்! என மாஞானி சாக்ரடீஸ் எடுத்த பாடம்தான்.  அதற்குப்பின் பிளேட்டோ, அதற்குப்பின் மகா அலெக்சாண்டர் எனச் சாதனைப் பட்டியலை நீள வைத்தது.  மகா வித்வான் மீனாட்சி சுந்தரனாரின் தமிழ்உளி தான், தமிழ்த்தாத்தா என்னும் ஒப்பற்ற சிற்பத்தை உருவாக்கிக் காட்டியது.

    ஆயிரம் கண்கள் ஆப்பிள் விழுவதைக் கண்டன ஆனால் நியூட்டனுக்குத்தான் புவிஈர்ப்புத் தத்துவம் புதிதாகப் புலப்பட்டது.
    திரியுள்ள விவேகானந்தர் எனும் தீபம் தான், பொறியுள்ள மகான் இராமகிருஷ்ணர் எனும் ஒளிச் சுடரால் ஒளி வீசிச் சென்றது.  
“மாண்புடையவன் அவனே மாணவன்”
    பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பயின்று, என் உயிரினும் மேலான தமிழ் ஆசான்களால் செதுக்கப்பட்டு, பாரதப் பிரதமரின் தேசிய விருதை இளமறிவியல் இரண்டாமாண்டுபடிக்கும் போதேபெற்று, 1998ல் எம்.பில் படித்து முடிப்பதற்கு முன்னே அல்ஹாஜ் த.இ.செ. பத்ஹுர் ரப்பானி சாகிப் எனும் தமிழருவியின் உதவியால் 23 வயதில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ்த் துறையில் கடந்த நான்காண்டுகளாகப் பணியாற்றி வரும் எனக்கு, என்னிடம் படித்துச் சென்ற 2000 மாணவ, மாணவிகளுமே வைரங்கள்தான் என்றாலும்,
    தூசு தட்டி நான் பட்டை தீட்டிய ஓரிரு வைரங்களை உங்கள் முன் வைக்கிறேன். ”நாங்கள் விவேகானந்தர்களாக விளங்கத் தயார்தான்... இராமகிருஷ்ணர்களைத் தான் இராப் பகலாகத் தேடுகிறோம்’ என்று ஒரு மாணவன் கவிதை வாசித்துக் கொண்டிருந்த அந்த ஒரு வினாடியில் இரண்டாமாண்டு கணிதவியல் விலங்கியல் வகுப்புக்குள் நுழைந்தேன்.  செய்யுள் நடத்த வேண்டும் எனச் சொல்லி வரிகளை எழுதிப் போடக் கரும்பலகையில் கை வைத்தால் அதிர்ச்சி! கண்டவுடன் திகைத்துப் போனேன். பேச வாய்வரவில்லை. பெற்ற வயிற்றிலே இவன் பெட்ரோல் குண்டு எறிந்து விட்டானே என்ற வருத்தம் ஒருபுறம், இவர்களுக்கு வெறும் பாடம் மட்டுமா நடத்தினேன்? நான் கற்றுத் தந்த மதிப்பீடுகளுக்கு ஏன் மாரடைப்பு வந்தது?  சிகரங்களை நோக்கிச் சிந்திக்க வேண்டியவன், ஏன் தகரமாகத் தரமிழந்து போனான்? என் மனம் துடித்தது.  கண்ணீர் வடித்தது.
    ஏறக்குறைய 50 பெண்கள் 40 ஆண்கள் என இரு பாலினரும் பயிலும் வகுப்பில், ஏதோ ஒரு மாணவன் மதிய உணவு நேரத்தில் ஆங்கிலப் பேராசிரியர் திரு.மார்க்ஸ் அவர்களின் உருவத்தைக் கரும்பலகையில் ஓவியமாக வரைந்திருந்தான்.  அழிக்க மறந்து விட்டான்.  
அடுத்து என் வகுப்பு! ஆண்டவனை அடையாளம் காட்டும் ஆசிரியரையா அவமானப்படுத்துவது? வருத்தத்துடன் கேட்டபடி, இக்காரியத்தைச் செய்தது யார்? எனக் கேட்க, வகுப்பறையில் ஒரு நிமிடம் மௌனம் அலறியது.  திடுக்கிட்டேன்.  மிகவும் அமைதியான மாணவன் என நான் நினைத்த மாணவர் எம்.பி. அனந்த குமாரை நோக்கி என் கவனம் திரும்பியது.  
’தவறு செய்வது மனிதஇயல்பு திருத்திக்கொள்’ உனது பலவீனத்தை மாற்று; அதுவே பலம்” என்று அமைதியாகக் கூறி அமரச் செய்தேன்.
    கல்லூரி முடிந்தவுடன் துறைக்குத் தனியே அழைத்துப் பேசினேன்.  அமைதியாக ஆனால் ஆழமாக... தம்பி! தூண்டுகோல்களை நீ தூக்கி எறியலாமா? கரும்பலகையிலும், கழிவறைகளிலும் கிறுக்குவதை ஓவிய அட்டை வாங்கித் தருகிறேன். நிறைய வரை! போட்டிக்குப் போ...! பரிசுகளைக் குவி!  டாவின்ஸியாய் மாறு, கவின்கலை மன்றத்தில் வாய்ப்புத் தருகிறேன்... மூச்சுப்பிடித்து முன்னேறு... ’என்று அறிவுரை கூறினேன்.  என் வார்த்தைகள் அவனது வாழ்வை மாற்றின. எங்குச் சென்றாலும், அதன்பின் அவன் ஓவியமே முதல் பரிசு பெற்றது.  ”கனவுச் சிற்பங்கள்” எனும் கவிதை நூலுக்கு அட்டைப்படம் வரையுமளவு அவன் அடையாளப் படுத்தப்பட்டான்.  தினமும் இப்போது வீட்டுக்கு வருகிறான்.  என் நண்பனாக அவன் மாறிப் போனான். கள்வனாகக் கல்லெறியப் பட்டவன், இதோ வால்மீகியாக வாய்ப்புப் பெற்று விட்டான்.
உதவும் உள்ளங்கள்...

    “பத்தில் ஒரு பங்கைத் தானம் செய்யுங்கள்.
    பணத்தின் மீது பேராசை கொள்ளாதீர்கள்.
    தினமும் ஓர் உயிருக்கு நன்மை செய்யுங்கள்.
    இவைதான் என் குருநாதர் “பாலம்“ பா. கலியாணசுந்தரனாரின் தராக மந்திரம். திருவைகுண்டம் குமரகுருபரர் கல்லூரியில் நூலகராகப் பணியாற்றித் தியாகவாழ்க்கை வாழ்ந்து, திருமணமே முடித்துக்கொள்ளாமல் தன்னுடைய ஊதியம் (ரூ. 15.000) முழுக்க ஒவ்வொரு மாதமும் ஏழைகளுக்காகத் தானம் வழங்கி, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர், தான் இறந்தபின் தன் உடலைப் புதைக்கவோ எரிக்கவோ கூடாது என்றும் அதைத் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தானமாய் அறுத்துப் பாடம் படிக்க உதவுவதாக உயிர் எழுதி வைத்துள்ளவர்.  இவரது சேவையைக் கண்டு திரு. ரஜினிகாந்த் குடும்பத்தாரே தன் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டது போன்ற செய்திகளைக் கூறி, முதலாமாண்டு வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன்.  அய்யா கலியாண சுந்தரனாரோடு இரண்டு ஆண்டுகள் தங்கி, தமிழுகத்தின் பிரபல வார இதழுக்காக அவர்களின் வாழக்கை வரலாற்றை எழுதியிருந்தேன்.     
மாணவர்களே! சேவை செய்வதற்குப் பணம் தேவையில்லை.  மனம் தான் முக்கியம்.  கோடி ரூபாய் பணத்தை வைத்துக் கொண்டு ஒரு ரூபாய் கூட உதவி தராமல் இருந்தால், அவன் பிச்சைக்காரன்.  ஒரு ரூபாயை வைத்துள்ள பிச்சைக்காரன், பத்துப் பைசாவை அடுத்தவருக்குத் தானமாகத் தந்தால் அவன் கோடீஸ்வரன்“.

உதவும் உள்ளங்கள் சீனிவாசன்   

உங்களோடு படிக்கும் மாணவன் ஏழையாக வறுமையில் இருந்தால், ஆளுக்குப் பத்து ரூபாய் தந்தால் போதும்.  அம்மாணவருக்குத் தேர்வுக் கட்டணம் செலுத்தலாம்.
    ஊதுபத்தியாக ஊருக்கு உழைத்தால் - நீ
    மரணித்த பின்னும் மணத்தோடு இருப்பாய்“
    அடுத்தவருக்காக வாழும் மனிதனின், மாணவனின் பெயர் இறைவனின் இதயத்தில் இடம் பெற்று விடும்.  கல்லூரிக்கு வருவது முதல், போவது வரை ஒரு நாளில் ஏதேனும் ஒரு நல்ல காரியம் செய்துவிடு.  அன்றைக்கு ஒரு நல்ல காரியமும் செய்ய முடியாவிட்டால், ஒரு செம்பு தண்ணீரை வீட்டுச் செடிக்கு ஊற்றி விட்டுத்தூங்கு.
    உன் வீட்டில் நீத்தார் படமிருக்கும்.  அதில் தோற்றம் என்று எழுதி ஒரு வருடமும், மறைவு என எழுதி ஒரு வருடமும் எழுதப் பட்டிருக்கும்.  இடையில் (தோற்றம் – மறைவு) உள்ள சிறு கோடு தான் வாழ்க்கை.  அந்த சிறிய கோட்டு இடைவெளி எத்தனை நாள்? என்பதுதான் கேள்வி.
    “பாடத்தோடு மனித நேயத்தையும் மனப்பாடம் செய்.
    உதவும் உள்ளத்தோடு உலகின் வாழ்“
    என்று கூறிவிட்டு வெளியே வந்துவிட்டேன்.  பல மாணவ மாணவியர் கண்களில் நீர்த்துளி.  ஒரு மாணவன் மட்டும் உன்னிப்பாய் கவனித்தான்.  மாலை 5 மணி... மாணவ மாணவியரோடு பேசிவிட்டு வீடு கிளம்ப எத்தனித்தேன்.  எதிரே அந்த மாணவன்.  அய்யா....உங்களின் சொற்கள் என் நெஞ்சைச் சுட்டன.  ஆத்மாவைத் தொட்டன.  சேவை இயக்கத்தைச் சீக்கிரம் தொடங்குவேன்’ என்று கூறிச் சென்றவன் அடுத்த நாள் நேதாஜி இளைஞர் சேவை இயக்கம்’ தொடங்கினான்.  மாதம் தோறும் கூட்டம் போட்டான்.
    என்னுடைய பத்தில் ஒரு பங்கு பணத்தைப் பெற்று “எஸ்தர் அனாதை நிலையம்“ மாணவ மாணவியருக்கு நோட்டுப் புத்தகம் வாங்கிக் கொடுத்தான்.  அடிபட்டோர் முன் ஆம்புலென்ஸ்சாய் மாறினான்.  திக்கற்றவர்களக்குத் தெரஸாவாய் உதவினான்.  வல்ல நாட்டைச் சார்ந்த 7 வயது மாணவி செல்வி இரத்தப் புற்றுநோயில் உயிருக்குப் போராடியபோது கையில் உண்டியலேந்தி வகுப்பு வகுப்பாக நடந்தான்.  குஜராத் பூகம்ப நேரத்தில், இந்தியச் சகோதரனுக்காக வீடு வீடாகக் கையேந்தி அரிசி வாங்கி மூட்டை கட்டி அனுப்பி வைத்தான்.  கிராமந்தோறும் கலை நிகழ்ச்சிகள் வழங்கி எய்ட்சுக்கு எதிராக நாடகம் நடித்துப் பிரச்சாரம் செய்தான்.  எங்கள் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவர்களுக்குக் கலைப் பயிற்சி அளித்தான்.
    மொத்தத்தில் 3 ஆண்டுகளில் அன்னை தெரஸா அம்மையாரின் திருநெல்வேலிப் பதிப்பாகவே மாறிப் போனான்.  நரேந்திர நேதாஜி இளைஞர் இயக்கம் என்ற பெயர் கூடச் சமயச் சார்போடு அமைந்துவிடுமே என்று எண்ணி, உதவும் உள்ளங்கள் என்று பெயரை மாற்றி இதோ மூன்றாவதாண்டை நோக்கிச் சேவையைத் தொடங்கிவிட்டான்.  மாவட்ட அறிவியல் மைய இளம் விஞ்ஞானியாக ஆண்டுக்கு ஆண்டு அறிவியல் கண்காட்சி நடத்துகிறான்.  அக்குபஞ்சர் தேர்வெழுதி மருத்துவராகப் பதிவு பெற்று, கால் ஊனமுற்றவர்களைத் தன் மருத்துவ முறையால் குணமாக்குகிறான்.  ஆம்! என்னிடம் வந்து தீந்தமிழ் படித்த மு.ச. சீனிவாசன் தான் என் மனதில் நிற்கும் நல் மாணாக்கன்.
    தேமாவும், புளிமாவும் கற்றுக் தருவது மட்டும் ஆசிரியர் பணியன்று.  ஆன்மாவை ஆசுவாசப்படுத்துவதும், மகாத்மாக்களை மறுபதிப்புச் செய்வதும், தெரஸாக்களைத் தெரியவைப்பதையும் ஆசிரியர்கள் இன்று செய்தாக வேண்டும்.
    சமுதாயத்தின் சீக்குப் பிடித்த சிந்தனைகளின் போக்குப் பிடிக்காமல், சமுதாய அழுக்குகளைச் சலவை செய்யும் அக்கினிச் குஞ்சுகளை அவனிக்கு அடையாளம் காட்டுவதும் ஆசிரியரின் உயரிய பணிதான்.
    விவேகானந்தர் கேட்ட 100 இளைஞர்களையும் என் ஆயுளுக்குள் அடைகாத்துத் தந்து விட நினைக்கிறேன்.  இதோ ஓர் இளைஞர் தயார்.  அவன் தான் “ உதவும் உள்ளங்கள்” மு.ச. சீனிவாசன் எனும் என் அன்பு மாணவன்.

1997 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ.கமல்ஹாசன் அவர்கள் நடத்திய கட்டுரைப் போட்டியில்மாநில அளவில் முதலிடம் பெற்ற கட்டுரை

         ”மெல்லத் தமிழ் இனி...
       பாசத்திற்குரிய பாரதிக்கு,

தமிளில் பெயிலாகிப் போன தமிளுவேந்தன் எழுதுவது. நீ நளமா? நான் நளமா இல்லை! உன் மேல் என்றைக்குமே எங்களுக்குத் தீரா வெறியுண்டு.  மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று, பேதைக்குரலில் பெரிதாகச் சொன்னாயே… உன் வார்த்தைகளுக்கு நாங்கள் வாழ்க்கைக் கொடுத்துவிட்டோம்.
    சந்தக் கவியெடுத்து, செந்தமிழை அதில் குழைத்து மந்தத் தமிழினனத்தை மந்திரிக்க வந்த தமிழ், இன்று சீழ்பிடித்து, அயல் மொழியின் கால்பிடித்து மயானத்தை நோக்கி மாட்டு வண்டியில் போய்கொண்டிருக்கிறது! கவிஞர் பட்டங்களோ இன்றைக்குக் காசுக்குக் கிடைக்கின்றன, முனைவர் பட்டங்களோ மூர் மார்க்கெட்டில் விற்கின்றன.  கடைகளில் சிலேபி விற்கும் அளவுக்குகூடச் சிலப்பதிகாரம் விற்க மறுக்கிறது. 
அதோ பார், பாரதி! ஓடம் முழுக்க ஓட்டைகளோடு, காலங்கையின் கடைசிப் பயணயாய் நம் தமிழ், காரணம்... உம் நேசமிகு நெட்டை நெடுமரங்கள்...
    தேன் தமிழில் பேசினால் ஏன் தமிழில் பேசினாயென்று சண்டைக்கு வரும் கூட்டம் ஒருபுறம், துவிச்சக்கரவண்டியேறித் தொல்காப்பியத் தோட்டத்தில் தொடரோட்டம் நடத்துச் சொல்லும் கூட்டம் மறுபுறம். இடையில் ஊமை நாடகத்தின் உலவும் பாத்திரமாய் உன் உன்னதத் தமிழன்னை.
    தமிழ்ப்பள்ளிகளில் தலைநிமிர்ந்து நிற்பதை விட, கான்வெண்டுகளில் கம்பி எண்ணுவதைத்தான் கவுரமாய் நினைப்பவர்கள் நாம் என்பதாலோ என்னவோ, ”அய்யா” என்ற அழைப்புக் கூட அவமதிப்பாக அங்கீகரிக்கப்பட்டு விட்டது.
நெஞ்சு பொறுக்குதிலையே
    பப்பாளிப் பாலெடுத்துப் பால்கோவா கிண்டச் சொல்லி ஸ்டார் டி.வி. யில் அந்நியர் யாராவது ஆங்கிலத்தில் சொன்னால், உண்டு பார்த்துவிட்டு, உன்னதச் சுவையென்று தலையை ஆட்டும்போது நம் சுயங்கள், மலடாகிப் போனதை மறுக்க முடியாது.
    சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சாணியை இறக்குமதி செய்து வந்து, சந்தன மணம் அதில் சார்ந்திருப்பதாய்ச் சாதிக்கும் இவர்களுக்குத் தாய்மொழி என்பது தரங்குறைந்த ஒன்றுதான்.
    ஒன்றைரை வரிகளில் உலகளந்த திருக்குறளும், சிந்தனை தரும் சிலம்பும், மேலான மதிப்பீடுகள் தந்த மேகலையும், சீவகனார் வளம்பாடும் சிந்தாமணியும், சங்க இலக்கியத்தின் பத்து எட்டொடு குண்டலகேசியும் சொல்லாததையா வேறு உலகஇலக்கியங்கள் விளக்கி விடப் போகின்றன? மற்ற துறைகளை வாழ்க்கைக்குப் படிக்கிறோம் என்றால் தமிழில் வாழ்க்கையைப் படிக்கிறோம்.
    ஒவ்வொருவரும் தங்கள் கடிகாரம் காட்டும் நேரமே சரியென்று சாதிப்பதைப்போல அந்தந்த மொழியினர், தத்தம் தாய் மொழியை முன்னிறுத்திப் பிடிப்பது வழக்கம்;  நம் தமிழைத் தவிர! தாய் மொழியினால் மட்டுந்தான் எவராலுமே சிந்திக்க முடியும்.  தாகூரின் கீதாஞ்சலி நோபல் பரிசு பெற்றதென்றால், அவரின் “சிந்திப்பு மூலம்” வங்கமொழி!  எழுத்தாளர் தோப்பில் மும்மது மீரான் தன் நாவல்களைத் தனக்கு நன்கு பரிச்சயமான மலையாளத்தில் சிந்தித்து, பின் அதைத் தமிழ்ப்படுத்துகின்றாராம்.
ஆனால் நம் கல்வி முறையில் நடப்பதென்ன? எல்.கே.ஜி. முதல் எம்.பி.பி.எஸ். வரை தமிழின் “அ“ கரத்தைக்கூட அறியாமலே தமிழ்நாட்டில் பட்டம் வாங்கி விட முடிகிறது.  ஒன்றுமே புரியாத பிஞ்சு வயதில் “நர்சரி நரகங்களில்“ அவர்களை நட்டு ஆங்கிலஅமிலத்தை அள்ளி ஊற்றும்போது கல்வி கற்பதே அதற்குக் கசப்பாகப் பதிந்து விடுகிறது.
இனி பொறுப்பதில்லை
    திருமண வீட்டில் உணவு உண்ணப் பந்தியில் அமரும்போது, சாதம், சாம்பார், ரசம், பாயசம், மோர் எனத் தனியே முறையாக உண்ணும் நாம், மொழியில் மட்டும் கூட்டாஞ் சோறுகளையே கூடுமானவரை கலக்கிறோம் என்பது கண்களில் கந்தக அமிலத்தை ஊற்றுவதை விடக் கொடுமையான செய்தி.
Pass பண்ணி Study பண்ணி Start பண்ணி, எனத் தமிழைப் பேசிக் கொண்டிருக்கும் போது தமிழ் வாழவா செய்யும்?  தான் இறந்தபின் தன் கல்லறையில், ”இங்கே தமிழ் மாணவன் உறங்குகிறான்” என்று எழுதுங்கள், என்று அயல்நாட்டுப் பாதிரியார் ஜீ.யூ.போப்பையர் மதி்த்த தமிழுக்கு, தெவசம் வைக்க இன்று தேதி குறிக்கிறோம்.  தமிழில் பெயர் வைத்தாலும் ஆங்கிலத்தில் தலையெழுத்துக்கள், ஓர் ஆங்கில நூலில் ச. MAHADEVAN என எழுதினால், தோலை உரித்து அவர்கள் தோல் பை செய்து விடுவார்கள்.  ஆனால் நாம்?
    ”பொந்தி சேரி – பாண்டிச்சேரி எனும் பெயர் அடிமையின் அடையாளம், எனவே புதுச்சேரி ஆக்குவோம் என மாற்றி நான்கு வருடமானபின்தான் தமிழ்நாடு MADRAS, சென்னையாக மாறுகிறது.  அரசு ஆணை பிறப்பித்த பின்னும் விமான நிலையங்களில் இன்னமும் ’மெட்ராஸ்’ என அழைக்க முடிகிறதென்றால் தமிழ் இனி வாழவா செய்யும்?
ALL INDIA RADIOவை அகில இந்திய வானொலியாக்கி விட்டோம் என ஒரு கூட்டம் சப்தம் போடும் அதே நேரம் டெல்லி தமிழ்ச் செய்தியறிக்கையில் ”ஆஷாஷ்வாணி… செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் சுவாமி” என ஒலிக்கும்போது தமிழுக்கு, வாழும் வாய்ப்பு உண்டா என்ன?
இலக்கிய இடறல்கள்
    கேரளாவில் போய் “உங்கள் ஒப்பற்ற எழுத்தாளர் யார்?” என்றால் எந்தவித எதிர்க் கருத்துமின்றி எம்.டி. வாசுதேவன் நாயரையோ, பிறரையோ சொல்வார்கள்.  ஆனால் தமிழகத்தில்? ஊருக்கு ஒருவரைச் சொல்லி, கடைசியில் எவருமே இல்லை என்பார்கள்.  கோடிப் படைப்பாளிகளுக்குள் பல்லாயிரம் பிரிவினைகள்.  விளைவு  இலக்கியம் இடறலில்.
    கரன்ஸிக்காரர்களின் வியர்வைக்கு வெண்பா எழுவதும், ஹார்லிக்ஸை சோளநக்கியாக்கி, குளுக்கோஸைப் பருச்சருக்கரையாக மொழிமாற்றம் செய்யவும், முக்கல் முனகல்களின் இசைப்பள்ளங்களில் வார்த்தையை அள்ளிப் போட்டு நிரப்பும் ஆபாச வாகனமாயும் தமிழை மாற்றியபின் ’இலக்கியத்தமிழ்’ வாழவா செய்யும்?
இதயத்துடிப்பு நின்றுபோன இசைத்தமிழ்
    மாசில் வீணை வைத்து, மாலை மதியமும் பூண்டு, தேவாரப் பண்ணென்றும், தெவிட்டா நல்பாட்டென்றும், பூவாரமணம் பெற்ற புனிதஇசைத்தமிழ், இதயம் கிழிபட்டு இரணமாகிக் கிடக்கிறது. ”தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்” என்று அப்பரால் சப்பரத்தில் ஏற்றப்பட்ட சந்தத்தமிழ் சலுகைப் பருக்கைகளுக்காக இன்றைக்கு மொழிக்கலப்பில் மாட்டிக்கொண்டிருக்கிறது.   
இசையுலகின் மும்மூர்த்திகளான முத்துசாமி தீட்சிதரும், சியாமா சாஸ்திரியும், தியாகப்பிரம்மமுமான மூவருமே தமிழகத்தில் உதித்தவர்கள்தான்.  ஆந்திர விசயவாடாவின் சபாக்களில் போய் அமர்ந்து 24 மணி நேரமும் தமிழிசை பாடினால் சும்மா விடுவார்களா?  நாட்டுப்புறத் தமிழிசையை மறந்த சமுதாயத்தி்ன் முன் மெல்லத் தமிழ் துளிர்த்து விட முடியுமா?
நலிந்து கொண்டிருக்கும் நாடகத் தமிழ்
    நாடகத்துக்கே இலக்கணம் வகுத்து, சிலப்பதிகாரம் பேசிய சீர்மிகுகாலம் மாறி, காரை பெயர்ந்த கட்டிடமாய், வேரை இழந்த விருட்சமாய் தமிழ் நாடகங்கள் அழிவை நோக்கி அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றன.
    “How are you Bala? I am fine ya!” You became mad Ya... why? Because you are my friend.  இது மிகப்பிரபலமான தமிழ் நாடக கர்த்தாவின் தமிழ் நாடகத் தொடக்கம்... நிச்சயம் தமிழ் வாழும் தானே!
மனதில் உறுதி வேண்டும்...!
    ஓடு ஒழுகுவதைக் காரணம் காட்டி, வீட்டை விற்றுவிட்டுப் போய் விட முடியாது.  க்யூ வரிசையிலும், கேட்டுவாசலிலும், நடு சென்டரிலும் ”தமிங்கிலிஷ்,” படித்த நம் மனப்பான்மை மாற வேண்டும். ”சுத்தத் தமிழைப் பேசுங்கள்!” என்று சொல்ல வரவில்லை.  பேசும் தமிழைச் சுத்தமாகப் பேசுவோம் என்பதே என் அழைப்பு.
    தமிழ் என்றாலேயே கோவலன், கண்ணகி என்று பதிக்கப்பட்ட மதிப்பீடுகளை உடைத்தெறிய வேண்டும்.  எந்தத் துறைக்குமே சளைக்காத வகையில் தமிழும் நவீனத்தோடு கைக்கோர்த்து ஆண்டுகள் பலவாகி விட்டன.  அதையெல்லாம் தமிழறிஞர் ஏற்றுக்கொண்டு பிறருக்கும் அறிவித்தாக வேண்டும்.  அதற்கு விவாதங்களை முன்நிறுத்த வேண்டியது அவசியம்.   
    தூய வெண்துணியில் எந்த நிறத்தை ஏற்றினாலும், அது அதுவாகவே மாறிவிடும்.  ”இணையம்” வந்துவிட்ட நேரத்திலும் இலக்கணக் குறிப்புகளைப் பற்றியே ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தால், காலப்பேருந்து நம் காலில் ஏறிவிடும்.  தன் பிள்ளை என்பதற்காகக் காலக்முழுக்கக்  கக்கத்திலேயே தூக்கித் திரிந்தால் வளர்ச்சி என்பது வரப்போவதில்லை.
    சீக்குப்பிடித்த சிந்தனையை விட்டு விட்டுப், புதுமையைச் சிநேகத்தோடு வரவேற்போம்.  லேசரில் அச்சடிப்பதால், கம்பராமாயணமொன்றும் களங்கமாகி விடப் போவதில்லை.  முதலில் நம் தாய்மொழியை நாம் மதிப்போம்.  பின் உலகம் நம்மை மதிக்கும்.  அப்போது மெல்லத் தமிழினி வாழும் அந்த மேற்குமொழிகள் தனி புவிமிசை மாளும் ”பாரதி! உழவாரம் தூக்கிய அப்பர் மாதிரி, உறுதியைத் தூக்கிப் புறப்படுகிறோம்.
    காரணம்... உன்னைப் போல நானும், தாமிரபரணியின் தண்ணீர் குடிப்பவன்.
    எனது முதல் குறி அவன்தான்... அதோ பார்...
    அவன் பாடுவதை,
   

      ”தீராத விளையாட்டுப் பில்லை... கண்ணன்.
        தெருவிளே பெண்களுக்கோயாத தொள்ளை”
 
    ”இந்தியன்” தாத்தாவாக எழுகிறோம்... தமிழின் தலைகுனிவு நீக்க!

                                                                                        என்றும் அன்புடன்
                           தமிழ் வேந்தனாக

                      சவுந்தர மகாதேவன்,
                          பாளையங்கோட்டை.
 
உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தின ஜீன் 5 விழிப்புணர்வுக் கவிதை
அதுவரை ஓய்வில்லை…
                                                     
                                                              
                                                                                            யாரப்பா அது!
உலகப்பந்தை உயிரோடு புதைப்பது?

தவலைப் பானையில் வெந்நீர் போட்டது மாதிரி

கவலைப் பானையில் கண்ணீரை நிரப்பியது யார்?

துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகினால்
         தூத்துக்குடிக் கடல், பாளை வரை பரவுமப்பா!

பதை பதைக்கவில்லையா நெஞ்சம்?

அன்று ஓசிக்காற்றை ஒய்யாரமாகச் சுவாசித்தவன்

இன்று ஏசிக்காற்றுக்கு ஏங்குவது ஏனப்பா?

வெப்பத்தை உருட்டிக் கக்கத்தில் வைத்துக் கொண்டது போல்

துக்கத்தில் துடிக்கிறதப்பா தூய பூமி!

வெட்கத்தை விட்டுச்சொல்...

உனக்கும் இதில் பங்கில்லையா?

எருமைக்குரல் ஒலியெழுப்பிகளை மாட்டியபடி - சாலைகளில்

இருசக்கர ஊர்திகளில் நீ பறக்கும் போது

மருத்துவமனைகளின் மண்டையோட்டை நீ உடைக்கவில்லையா?

கொசு மருந்து வண்டிகளைப் போல

கரும்புகைக் கக்கிப்போகும் உன் வாகனங்களால்

பயணச்சாலைகள் சுடுகாடுகளாய் மாறிவிடவில்லையா?

ஓசோன் குடைகளில் ஓடிப்போய் ஓட்டை போட்டவனே!

உன் தோலெல்லாம் தொழுநோய் வரச்சம்மதமா?

வயல்களை உழுது உரத்தால் நிரப்பினாய்!

காய்கனிகளை எல்லாம் வேதியியல் கிடங்காய் மாற்றினாய்!

கழிவுத் தொட்டியாய் தாமிரபரணியை மாற்றினாய்!

பிளாஸ்டிக் அழிவுகளால் உலகத்தைத்தாக்கினாய்!

குருதி முதல் சாம்பார் வரை பாலிதீன் பைகளில் தேக்கினாய்!

இயற்கையே சுகமென்றிருந்தவனின் இதயத்தைத் தாக்கினாய்!

நுரையீரலோடு தப்பாமல் தண்ணீர்ப் பாட்டிலையும் தூக்கித் திரிபவனே! –

இனி

உயிர்க்காற்றுக்கு உரிய உத்திரவாதம் இல்லாததால்

வாயு உருளைகளை வயிற்றில் கட்டிக்கொண்டு திரியப் போகிறாயா?

மரங்களின் மரணத்திற்கு மனுப்போட்டு விட்டுத்தானே

நான்கு வழிச் சாலைகள் அமைக்க நாள் செய்தாய்!

விழிப்புணர்வுக் கவிதை

அதுவரை ஓய்வில்லை…

  திருச்செந்தூர்ச் சாலையில் வானுயர்ந்து இருந்த

மருதமரங்களின் இடத்தில் இப்போது சிக்னல்

மரங்கள் சிக்கலாய் சிரிக்கின்றனவே!

உன் மின்சார ரம்பங்கள் படாமல்

மிச்சசமிருப்பது கோயில் கொடி மரங்கள் மட்டும்தானா?

  குளங்களைக் குறிவைத்தாய் – பாவம்

அவற்றில் பேருந்துகள் நிற்கின்றன.

நதிகளைக் குறி வைத்தாய்

அவற்றைப் பொக்லைன்கள் தின்கின்றன.

  இயந்திரங்களோடு நீ எங்கே சென்றாலும்

இடரென்னவோ இயற்கைக்குத்தான் எப்போதும்!

ஜீன் – 5

v இது கொண்டாடப்பட வேண்டிய தினமன்று

கழிவுகளின் அழிவுகளைக் கண்டு நாம்

மாற வேண்டிய தினம்

v இனி ஒரு விதி செய்வோம்...

தனி ஒரு வழி செய்வோம்...

இற்றுப் போகும் சுற்றுச்சூழலைப்

பற்றிப் பாதுகாப்போம்

அதுவரை ஓய்வில்லை.

             - முனைவர். ச. மகாதேவன்

Blogroll